×

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு மாலை, தாலியுடன் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினர்: தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள் தஞ்சை பெரிய கோயிலில் பரபரப்பு

தஞ்சாவூர்: உலகம் முழுவதும் நேற்று காதலர்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் கேக், ஜாக்லேட் கொடுத்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சியினர், காதலர் தினத்தன்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் காதலர்களை தாலி கயிறு கட்ட வைப்போம் என்று அறிவித்திருந்தனர். அதன்படி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் தென்னவன் மற்றும் நிர்வாகிகள் தஞ்சாவூர் பெரியகோயில் அருகே மாலை, மஞ்சள் கயிறுகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்எச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் பெரியகோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளை நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். இதில் ஒருசில காதல் ஜோடிகள், இந்து மக்கள் கட்சியினர் மாலை, தாலியுடன் பெரிய கோயில் நுழைவு வாயில் முன்பு நிற்பதை கண்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். இதில் பெரிய கோயிலுக்கு டூ வீலர்களில் வந்த சில காதல்ஜோடிகள் உடனடியாக யூடர்ன் போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள். குடும்பத்தோடு சுற்றுலாவாக தனியாக வந்தவர்கள் மட்டுமே பெரிய கோயிலுக்குள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்து மக்கள் சுட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post காதலர் தினத்துக்கு எதிர்ப்பு மாலை, தாலியுடன் காத்திருந்த இந்து மக்கள் கட்சியினர்: தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள் தஞ்சை பெரிய கோயிலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Hindu People's Party ,Thanjavur ,
× RELATED வரத்து அதிகரிப்பு தஞ்சாவூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைவு